செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட மலை நகர் பகுதியில் கடந்த 2016-17-ம் நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து நியாயவிலைக் கடை கட்டப்பட்டது.
இந்த கடையில் இதுநாள் வரை குடிமைப் பொருட்கள் ஏதும் வழங்கப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மேலும், இந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பொதுமக்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, நேற்று (14.10.2020)-ல் அப்பகுதியில் நடமாடும் ரேஷன் கடையை துவக்கி வைத்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தியிடம் மலைநகர் பகுதி மக்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது என்னவெனில், எங்கள் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகாலமாக எங்கள் பகுதியில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையில் பொருட்கள் வழங்காமல் பயன்பாட்டில் இல்லாததால் நாங்கள் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அச்சிறுபாக்கம் காந்தி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதாகவும், தேசிய நெடுஞ்சாலையினை கடந்து சென்று பொருட்கள் வாங்குவதால் சாலை விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், முதியோர்கள் சாலைகளை கடப்பதை தவிர்ப்பதற்காகவே பல சமயங்களில் பொருட்களை வாங்க இயலாத சூழ்நிலையில் உள்ளதாகவும், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த மனுவினை ஏற்றுக் கொண்ட மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி, அதனை பொது விநியோக திட்ட துணைப் பதிவாளரிடம் அளித்து இப்பகுதியில் உள்ள நியாயவிலை கடையினை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment