செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஜானகிபுரம் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே 98 செண்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இருவர் இது எங்கள் முன்னோர்களின் சொத்துதான் எனக்கூறி பல இலட்சத்திற்கு பேரம் பேசி பணம் பெற்று நிலத்தை விற்பனை முயற்சி செய்துள்ளனர்.
இதனை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இந்த சட்டத்திற்கு புறம்பான செயலை தட்டிக் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எதையும் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் ஆக்கிரமிப்பு பணிகளில் கவனம் செலுத்தியதால் இளைஞர்கள் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
பின்னர், “இந்த இடம் அரசுக்கு சொந்தமான நிலம், இதனை யாரும் உரிமை கோர முடியாது” என்ற பதாகைகளை வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இருமுறை வைத்தும் அந்த பதாகைகளை ஆக்கிரமிப்பாளர்கள் பிடிங்கி எறிந்துள்ளனர்.
எனவே, அப்பகுதி இளைஞர்கள் இந்த விவகாரம் குறித்து கடந்த 02.10.2020 அன்று மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து கிராம இளைஞர்களிடம் தெளிவாக கேட்டறிந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ, கிராம இளைஞர்களை 06.10.2020 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் புகார் மனுவை அளித்தார். பின்னர், மதுராந்தகம் எம்.எல்.ஏ. சு.புகழேந்தி முயற்சியில் செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின்பேரில் அந்த இடம் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த இடம் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்காமல் இருப்பதுற்கு சமுதாய நலக்கூடம் கட்டித்தரக் கோரி 13.10.2020 அன்று மாலை மதுராந்தகம் எம்.எல்.ஏ-வின் வீட்டிற்கே சென்று ஜானகிபுரம் கிராம இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட எம்.எல்.ஏ இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பதாக உறுதியளித்தார்.
இந்த செயல்களுக்காக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர். நெல்லிக்குப்பம் சு.புகழேந்திக்கு ஜானகிபுரம் கிராம இளைஞர்கள் தங்களின் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment