வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - மீனம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 03, 2018

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - மீனம்


நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம், சித்தி நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் நிறைந்த சித்த யோகத்தில், செவ்வாய் ஓரை முடியும் தருணத்தில், ஏழாம் சாமத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்யகால வர்ஷ ருதுவில், இரவு 10 மணிக்குச் சூரிய உதயம் 39.55 நாழிகைக்கு, ரிஷப லக்னத்திலும் நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும் வேத உபநிஷதங்களுக்குரிய மெய்ஞ்ஞான கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிகம் ராசிக்குள் சென்று அமர்கிறார்.
13.03.2019 முதல் 09.04.2019 வரை அதிசாரமாகவும், 10.04.2019 முதல் 18.05.2019 வரை வக்ர கதியிலும் தன் சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.

செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் குரு வந்து அமர்வதால் ரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் பாதிப்படையும். ரசாயனத் தொழிற்சாலைகள் சீரமைக்கப்படும். உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும், மாசுக்கட்டுப்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். மருத்துவர்களுக்கு வருமானம் அதிகமாகும்.
சூறாவளிக் காற்றுடன் கனமழை பொழியும். புதிய புயல் சின்னங்கள் உருவாகும். புயலால், இடிகளால் பேரழிவு உண்டு.காலப்புருஷ ராசிக்கு 8-ம் ராசியில் குரு அமர்வதால் ரியல் எஸ்டேட் சுமாராக இருக்கும். மழை, வெள்ளத்தால் விளைநிலங்கள், பயிர்கள், அடித்துச் செல்லப்படும். நாட்டின் கடன் அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை நவீனமாகும். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். இனி, பனிரெண்டு ராசிக்காரர்களை என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.

மீனம்

 


தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளாதவர்களே! மூடநம்பிக்கைகளில் மூழ்காமல் அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 8-ல் மறைந்து வரவுக்கு மிஞ்சிய செலவுகளை ஏற்படுத்தினாரே! ஏகப்பட்ட மனஇறுக்கங்களையும், கவலைகளையும் குருபகவான் கொடுத்தாரே! சேமிப்புகளை எல்லாம் கரைத்தாரே! மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட்டுச் சிக்கினீர்களே!
தேனொழுகப் பேசி உங்களைப் பயன்படுத்திக் கொண்டு கறிவேப்பிலையாகத் தூக்கி எறிந்தார்களே! ஒருவரையும் இந்த உலகில் நம்ப முடியவில்லையே என்று தனியாக உட்கார்ந்து புலம்பினீர்களே! 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால் இனி தொலைநோக்குச் சிந்தனையால் எதையும் சாதிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.



பிரச்சினைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். தீர்வு தேடி வெளியில் அலையாமல் உங்களுக்குள்ளேயே உங்கள் உள்மனசுக்குள்ளேயே விடையிருப்பதை இனி உணர்வீர்கள். குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும். பூர்வீகச் சொத்தில் பங்கு கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
குரு பகவான் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் கவுரவப் பதவிகள் வரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். எங்கே சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதிக வட்டிக் கடனைக் குறைந்த வட்டிக் கடன் பெற்று அடைப்பீர்கள். வீட்டில் தள்ளிப் போய்க்கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும்.


குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனிக் குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.
04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம்பக்கத்தவருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். ஊர்ப் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள்.
 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்துக்குச் செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழிச் சொத்து கைக்கு வரும்.
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 10-ம் வீட்டில்  மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் ஒரே நாளில் முக்கியமான இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பழிச்சொல் வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்.
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள்.


வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த ஒருவரைச் சந்திப்பீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள்.
தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்குவதற்கு முடிவு செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சந்தை ரகசியங்களைத் தெரிந்துகொள்வீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஆர்டர்கள், ஏஜென்சிகள் வரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகம் சார்ந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.


இழந்த பொறுப்புகளை மீண்டும் பெறுவீர்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். பழைய சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும்; சலுகைகளும் கிடைக்கும்.
இந்த குரு மாற்றம் சிதறிக் கிடந்த உங்களைச் சீராக்குவதுடன் சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அந்தஸ்தையும் பிற சவுகரியங்களையும்  தரும்.

பரிகாரம்: பைரவரை அஷ்டமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். காராமணியைத் தானமாகக் கொடுங்கள்.


No comments:

Post a Comment