சேலம் மாநகரின் மைய பகுதியில் பட்டபகலில் சாலையோரம்
விளையாடிக்கொண்டிருந்த 3 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் சேலத்தில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தின் மையப்பகுதியான சத்திரம் அருகே உள்ள முள்ளாகாடு
பகுதியில் வசித்து வருபவர்கள் பாலாஜி, நித்யா தம்பதியினர். இவர்களுக்கு 2
ஆண் குழந்தைகள்.
இந்நிலையில் வீட்டிற்கு வெளியே சாலையோரம் விளையாடி கொண்டிருந்த மூன்று வயது
ஆண்குழந்தை யோகேஸ்வரனை அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு
பெண்கள் கடத்தி சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பதறிய பெற்றோர்
இதையறிந்த பெற்றோர் பதறிபோய் செவ்வாய்பேட்டை காவல்துறையினருக்கு தகவல்
அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் குழந்தை
கடத்தல் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துணை ஆணையர் ஆய்வு
மேலும் மாநகரம் முழுவதும் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு
குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை
நேரில் பார்வையிட்டு குழந்தையை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த
உத்தரவிட்டுள்ளார்.
போலீசார் திணறல்
மேலும் இந்த சாலையில் மாநகர காவல்துறை சார்பில் பொறுத்தப்பட்டுள்ள
கண்காணிப்பு கேமராக்கள் இயங்காமல் இருப்பதால் கடத்தல் சம்பவத்தில்
ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
அதேநேரத்தில் பாலாஜி- நித்யா தம்பதிக்கு எதிரிகள், பகையாளிகள் உள்ளனரா
என்றும், குழந்தை கடத்தலில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டனரா என்ற கோணத்திலும்
போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பட்டப்பகலில்
சேலம் மாநகரின் மையப்பகுதியில் பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில்
சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் வட
மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக தொடர்ந்து
புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment