தேர்தலில் வெற்றி பெற்றதை வெடி வெடித்து கொண்டாடிய பாஜகவினரால்
நான்கு துணிக்கடைகள் எரிந்து சாம்பலாகினதுடன், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள
பொருட்களும் தீயில் கருகின.
இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 3 பேரை
போலீசார் கைது செய்துள்ளனர்.
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் பள்ளிவாசல் அருகே உள்ள கட்டிடத்தின்
முதல் தளத்தில் 4 ஜவுளிக்கடைகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில்
பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதும், மணப்பாறை பாஜக தொண்டர்களுக்கு
பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது
பட்டாசு வெடித்தனர்
இதையடுத்து, ஆட்டம், பாட்டம் என இறங்கி பொதுமக்களுக்கு இனிப்புகளை
வழங்கினர். புத்தாநத்தம் பள்ளிவாசல் அருகேயும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து
கொண்டாடி உள்ளனர். அதில் ஒரு பட்டாசு பறந்து சென்று ஜவுளிக்கடைகளின்
பின்பகுதியில் கீற்றால் வேயப்பட்ட மேற்கூரையில் விழுந்தது.
அணைக்க முடியவில்லை
இதில் அந்த கொட்டகை தீப்பற்றி எரிய ஆரம்பித்ததுடன் ஜவுளிக்கடைகளுக்கும் தீ
தாவியது. ஜவுளிக்கடைகளில் தீ பற்றி எரிவதை கண்டதும் அருகில் இருந்தவர்கள்
தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை அணைக்க
முடியவில்லை.
சாலை மறியல்
உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால்,
தீயணைப்பு வாகனங்கள் வர தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள்
சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய
வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
3 பேர் கைது
இந்த தீ விபத்தில் 4 ஜவுளிக்கடைகளிலும் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த
துணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இதன் சேத மதிப்பு பல
லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி
புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், இது தொடர்பாக 3 பாஜக
நிர்வாகிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment