இந்தியா - சீனா எல்லை மோதல் காரணமாக இந்தியாவில் உள்ள சீன நிறுவனங்களுக்கு எதிராக மக்கள் பேசத் துவங்கி உள்ளனர்.
சீனப் பொருட்களை இந்தியாவில் ஆதரிக்கக் கூடாது என்ற கருத்தும் வலுப் பெற்று வருகிறது.
அது ஐபிஎல் தொடருக்கும் பெரிய சிக்கலை உண்டாக்கி உள்ளது. அது பற்றி விவாதிக்க அடுத்த வாரம் ஐபிஎல் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தியா சீனா எல்லை மோதல்
இந்தியா சீனா எல்லையில் கடந்த வாரம் நடந்த மோதலில் 20 இந்திய இராணுவ
வீரர்கள் மரணம் அடைந்தனர். சீன வீரர்கள் சுமார் 40 பேரும் மரணம் அடைந்ததாக
கூறப்படுகிறது. அப்போது முதல் இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நிலவி
வருகிறது.
மக்கள் கோபம்
இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் சீன பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனக்
கூறி தங்கள் எதிர்ப்புகளை பல்வேறு வழிகளில் காட்டி வருகின்றனர். சீன
பொருட்களை எந்த வகையிலும் இந்தியாவில் ஆதரிக்கக் கூடாது என எதிர்த்து
வருகின்றனர்.
சிக்கலில் ஐபிஎல்
இது ஐபிஎல் தொடருக்கு ஒரு வகையில் சிக்கலாக அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரின்
பிராண்ட் ஸ்பான்சராக இருக்கும் "விவோ" எனும் மொபைல் நிறுவனம் சீனாவை
சேர்ந்ததாகும். அந்த நிறுவனத்தை ஸ்பான்சராக தொடர்வதில் தான் சிக்கல்
எழுந்துள்ளது.
ரசிகர்கள் ஆதரவு கிடைக்காது
2020 ஐபிஎல் தொடர் ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முயன்று வருகிறது. அப்போது விவோ
நிறுவனத்தை ஸ்பான்சராக தொடர்ந்தால் ரசிகர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி
இருக்கும், ஆதரவு கிடைக்காது.
விரைவில் கூட்டம்
இந்த நிலையில், இது பற்றி விவாதிக்க அடுத்த வாரம் ஐபிஎல் கூட்டம் நடைபெற
உள்ளது. அது பற்றி ஐபிஎல் நிர்வாகம் தன் ட்விட்டர் பக்கத்தில்
வெளியிட்டுள்ள பதிவில் ஐபிஎல்'இன் பல்வேறு விளம்பர ஒப்பந்தங்கள் தொடர்பாக
விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
விளம்பரதாரர் குறித்து முடிவு
விவோ மட்டுமின்றி, பேடிஎம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்
என கூறப்படுகிறது. பேடிஎம் நிறுவனத்தில் சீனாவின் பெரிய நிறுவனமான அலிபாபா
முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவோ மூலம் 440 கோடி வருவாய்
கிடைக்கும் நிலையில், அந்த வாய்ப்பை ஐபிஎல் விட்டுக் கொடுக்குமா? என்ற
கேள்வியும் எழுகிறது.
பொருளாளர் கருத்து
முன்னதாக பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறுகையில், உணர்ச்சிவசப்படாமல்
பார்த்தால், சீன நிறுவனத்தின் பொருட்களை விற்க விளம்பரம் செய்தாலும்,
அவர்கள் அதில் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கை விளம்பரமாக பிசிசிஐ-க்கு
அளிக்கிறார்கள். அதில் 42 சதவீதம் இந்திய அரசுக்கு வரியாக அளிக்கப்படுகிறது
என்றார்.
வேறு வழியில்லை
விளம்பர வாய்ப்புகளை விட பிசிசிஐ விரும்பாவிட்டாலும், ஐபிஎல் தொடர்
நடக்கும் போது ஐபிஎல்-லுக்கு எதிராக ரசிகர்கள் திரண்டால் அது மேலும்
சிக்கலாகி விடும். அதனால், விளம்பர ஒப்பந்தந்தை மாற்ற அதிக வாய்ப்பு
உள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment