வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, September 27, 2018

திமுக தலைவர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி MK Stalin Admit in Apollo Hospital

திமுக தலைவர் ஸ்டாலின்  அப்போலோ மருத்துவமனையில் அனுமதி



திமுக தலைவர் ஸ்டாலின் சிறுநீர்பாதை தொற்று  காரணமாக  நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு பின் இன்று காலை 10  மணிக்கு மேல் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது

தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning

தினம் ஒரு நாலடியார்



பாடல் - 2.
துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.

அர்த்தம் :
குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறிவரும்.

தினம் ஒரு திருக்குறள் அர்த்தத்துடன் - Daily one Thirukkural with meaning

 தினம் ஒரு குறள் :

குறள் :
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.

 அர்த்தம் :

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

Wednesday, September 26, 2018

பெண்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டால் என்ன தவறு?



பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் Being Me தொடரின் மூன்றாவது கட்டுரை இது.



முகநூல்

சமூகவலைதளங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் ஃபேஸ்புக்கில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகத் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றேன். நான் பார்த்த விதத்தில் பெண்களுக்கு சமூகவலைதளங்களில் நிகழும் சாதகமான விளைவுகளையும் எதிர்மறையான அனுபவங்களையும் ஒரு விவாதப் பொருளாக எடுத்து கொள்ளலாம். முதலில் சாதகமானவற்றைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். ஏனெனில் நேர்மறையான விளைவுகள் மிகக் குறைவு. எனவே அதை அடிக்கோடிட்டு முதன்மைப்படுத்துவது நல்லது.
எழுத்துகள் மூலம் கருத்து பரிமாற்றம்

சென்ற தலைமுறைப் பெண்களுக்குக் கிட்டாத ஒரு வாய்ப்பு எழுத்து மூலம் பொதுவெளியில் கருத்து பரிமாற்றம் நிகழ்த்துவது ஆகும். பெரும்பாலும் தோழிகளுக்குக் கடிதம் எழுதும் அளவிற்கு எழுதுபொருள் சுருங்கியதாக இருந்திருக்கும். பெண் எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே இருந்தனர்.
ஆனால் சமூக வலைதளங்கள் வந்தபின் அத்தகைய இடர்கள் குறைந்து எழுத்துமொழி பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. பத்தில் ஆறு பெண்களாவது எழுதக்கூடியவர்களாக இருக்கின்றனர். இவ்விடத்தில் என்ன எழுதுகிறார்கள் என்பது முக்கியமன்று. எழுத்து மூலம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்வது அதிகரித்திருக்கின்றது. மேலும் எழுதவேண்டும் என்கிற ஆர்வத்தினால் பல பெண்கள் புத்தகங்கள் வாசிக்கின்றனர்.



பிபிசிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெண்கள் அரசியல் பேசுவதும் இலக்கியம் பேசுவதும் கடந்த நான்காண்டுகளில் சரசரவென அதிகரித்ததில் சமூகவலைதளங்களுக்குப் பெரும்பங்கு உள்ளது. அதேபோல எழுத்தாளராக அங்கீகரிக்கப்படுவது சாதாரண விஷயமன்று. ஆனால் இன்று ஃபேஸ்புக்கில் எழுதியோ ப்ளாக்கில் எழுதியோ பின்பு அவற்றைத் தொகுத்து எளிதாக எழுத்தாளர் என்று அறியப்படலாம்.
நம் படைப்புகளை விளம்பரம் செய்வதற்கும் நம்முடைய துறைசார்ந்தவர்களை அணுகுவதற்கும் இத்தளங்கள் ஒரு தொலைதொடர்பு காரணியாக இருக்கின்றன. மேலும் எனக்கு வருகின்ற விமர்சனங்களையும் பாராட்டுகளையும் நான் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடிகிறது. இவ்வளவு நன்மைகள் இருப்பினும் இதில் இரண்டுபங்கு எதிர்மறை அனுபவங்கள் சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கும் அனைத்துப் பெண்களுக்கும் கிடைத்திருக்கும்.
எதிர்மறை அனுபவங்கள் அதிகம்

எதிர்மறை அனுபவங்களில் முதலாம் இடம் வகிப்பது பாலியல் வசை. உடல் ரீதியான விமர்சனங்கள், பகடிகள், தவறாகச் சித்தரித்தல் போன்றவை பெண்கள் வழக்கமாக எதிர்கொள்பவை. முதன்முறையாகத் தாக்கப்படும்போது பல பெண்கள் இங்கிருந்து கணக்கை மூடிவிட்டு கிளம்பிவிடுகின்றனர். ஏனெனில் பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்கள் தங்களது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.



பீயிங் மீ

பெண்ணுக்கான பெயர் பாலியல் ரீதியாக சிதைக்கப்படும்போது அது அக்குடும்பச்சூழலை பெரிதும் பாதிக்கும் காரணியாக உள்ளது. திருமணமாகாத பெண்கள் எனில் அவர்களது தாய் தந்தையை பாலியல் ரீதியாகத் திட்டுவது, குடும்பப் பெண் எனில் அவள் சுயஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்குவது என்று இங்கு பாலியல்ரீதியான தாக்குதல்கள் ஏராளம்.
இதைச் செய்பவர்கள் பெரும்பாலும் முகம் மறைத்துத் தாழ்வுணர்வில் போலிக்கணக்குகளில் இயங்கி வருபவர்கள். இவர்கள் ஏதேனும் ஒரு பெண் சுதந்திரமாக ஏதாவது கருத்தை முன்வைத்தால் அந்தக் கருத்தை நோக்கி எதிர்விவாதம் வைக்க மாட்டார்கள். உருவகேலி, ஒழுக்கப்பகடி, வசைகள் முதலியவற்றில் ஈடுபட ஆரம்பிப்பார்கள். இதற்குத் தீர்வாக ப்ளாக் செய்துவிடுங்கள் என்கிற அறிவுரைகளைப் பொதுவெளியில் கேட்கலாம். நாம் ப்ளாக் செய்வதால் அந்தப் போலிக்கணக்கர் அமைதியாகிவிடப்போவதில்லை.
இதேபோல மற்றொன்று, குழுவாக இணைந்து நம்மை வசைபாடுவது. இதில் பெண்களும் உள்ளடக்கம். காரணமற்ற வன்மங்கள் அல்லது சுயகழிவிரக்கம் முதலியவை இத்தகைய வசைபாடல்களுக்கு இவர்களை அழைத்துச்செல்கிறது. பெண்கள் இங்கு ஓரளவு இவற்றைப் புரிந்துகொண்டு தன்விருப்பத்தின் பேரில் தொடர்ந்து இயங்கிவந்தால் மனிதர்கள் எத்தனை கேவலமானவர்கள் என்பதை அறியலாம்.


சமூக வலைதளங்கள் மானுடம் மீது அசூயை கொள்ள வைக்கும். ஒவ்வொருவரிடமும் இருக்கின்ற நஞ்சை ஒவ்வொரு தருணத்தில் அறியலாம். மேலும் பெண்களுக்கு எதிராக இப்படியோர் உலகம் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறதா என்கிற வியப்பும் ஏற்படும்.



பிபிசிபடத்தின் காப்புரிமைBBC SPORT

பெண் என்கிற காரணத்தினால் வரும் மற்றொரு எதிர்விளைவு ஃபாலோயர்களின் விருப்பம். அவர்களது விருப்பம் வெறும் தற்படங்களும் புகைப்படங்களும் மட்டுமே. ஒரு கனமான இலக்கியம்சார் கட்டுரையோ கவிதையோ எழுதினால் கண்டுகொள்ளப்படுவதில்லை. பெண் பொதுவெளிக்கு வந்தால் அவள் அழகைக் கடந்து படைப்புகளை கவனிக்கத் தவறுகின்றனர். இது லாபமான விஷயம்தானே என்று கருதக்கூடும். மேலோட்டமாகப் பார்த்தால் அவ்வாறு தோன்றும். ஆழமாகச் சிந்திக்கும்போது பெண்களை அறிவுசார் தளத்தில் சுதந்திரமாக இயங்கிட மறைமுக எதிர்ப்புதான் இத்தகைய அழகு சார்ந்த ஆராதனைகளும் பாராட்டுகளும்.
இப்போது புதிதாக உருவாகியிருக்கும் மோசமான தாக்கம் ட்ரெண்டிங்கும் கொள்கைசார் சண்டைகளும். இன்றைய டிரெண்டிங் ஓர் அரசியல்வாதியின் பேச்சு என்றால் அதுகுறித்து கட்டாயம் பகடியோ எள்ளலோ செய்திருக்க வேண்டும். இல்லை அந்நேரத்தில் கவிதையோ வேறு ஏதோ எழுதினால் வசைக்குள்ளாவோம்.

அடுத்து அடிப்படைவாதம் மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளால் இரண்டு பிரிவாக நின்று எந்தக் கருத்தையும் ஆராயாமல் முட்டாள்தனமாக ஒருவரையொருவர் சாடி எழுதும் வழக்கம். உதாரணமாக நம் வழியில் சுதந்திரமாக எழுதிக்கொண்டிருப்போம். நம்மிடம் வந்து ஒரு கொள்கையைத் திணித்து இதுதான் சுதந்திரம் என வகுப்பெடுக்க ஆரம்பிப்பார்கள். நாம் கேட்கவில்லை எனில் அடிப்படைவாதியாக முத்திரை குத்தப்பட்டு ஒவ்வொருமுறையும் மோசமாக சித்தரிக்கப்படுவோம். இதுதான் உங்கள் கருத்தியலா என்று கேள்வி கேட்டால் அந்தப் பெரிய மனிதரின் படத்தை முகப்புப் படமாக வைத்துக்கொண்டு நம் குடும்பத்தையும் சேர்த்து வசைபாடுவார்கள்.



being me

இதிலிருந்து மீள்வது எப்படி என்கிற கேள்வி அனைவருக்கும் எழும். உங்களை வசைபாடத் துவங்கினால் பதிலுக்கு நாமும் அதேமாதிரி கெட்டவார்த்தையில் அவர்களது குடும்பத்தை இழுத்தால் போதும் அடங்கிவிடுவார்கள். ஏனெனில் இங்கு பெண்கள் கெட்டவார்த்தை பேசமாட்டார்கள் என்கிற மூடநம்பிக்கை ரொம்பக்காலமாக இருக்கின்றது. அதிலும் நல்ல குடும்பத்துப் பெண்கள் என்று ஓர் உயர்வு நவிற்சியினை உருவாக்கிக்கொள்வர்.
மேலும் இங்கு சைபர் குற்றப்பிரிவு, பணமோசடிகளில் துரிதமாக இயங்கிக் குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்கும் அளவிற்கு பெண்கள் மீது நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களில் ஆர்வம் காட்டப்படுவதில்லை. ஒருவன் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக உருவகேலியாகத் தவறாகப் பேசுவதற்கோ எழுதுவதற்கோ பயப்படும் அளவிற்குச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். போலிக்கணக்குகளை முடக்குவதில் அரசு தீவிரம் காட்டினால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் பெருமளவில் குறையும். பெண்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் சமூகவலைதளங்களிலேயே கேள்விக்குள்ளாகும் நிலையில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளில் முதலிடத்தில் இந்தியா இருப்பதில் வியப்பேதும் இல்லை.


தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning

பாடல் - 1.

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று.

அர்த்தம் :
ஆறு வகைச் சுவை உணவை அன்புடன் மனைவி உண்பிக்க, ஒரு கவளமே கொண்டு, மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியராகி, வேறோர் இடம் போய், எளிய கூழ் உணவை இரந்து உண்பர். ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத்தக்கதன்று. 

தினம் ஒரு திருக்குறள் அர்த்தத்துடன் - Daily one Thirukkural with meaning

 தினம் ஒரு குறள் :

குறள் :
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு.

 அர்த்தம் :

 எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. 

Tuesday, September 25, 2018

நடிகர் ராஜ்குமார் கடத்தல்: வீரப்பன் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டது ஏன்?



18 ஆண்டுகளுக்கு முன்பாக கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 9 பேரையும் ஈரோடு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கன்னட திரையுலகின் மிகப் பிரபலமான நடிகராக விளங்கிய ராஜ்குமார் கடந்த 2000ம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதியன்று தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள தொட்டகஜனூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது சந்தன மரக்கடத்தல் வீரப்பன் தலைமையிலான ஆயுதம் தாங்கிய குழு ஒன்றால் கடத்தப்பட்டார். அவருடன் மேலும் மூன்று பேரும் கடத்திச் செல்லப்பட்டனர்.


108 நாட்கள் கழிந்த பிறகு, கர்நாடக - தமிழக அரசுகள் நடத்திய பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் நவம்பர் 15ஆம் தேதியன்று ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். வீரப்பனும் அவருடைய கூட்டாளிகள் 14 பேரும் இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், 2004ஆம் ஆண்டில் வீரப்பனும் அவருடைய கூட்டாளிகள் சந்தன கவுடா, மல்லு, சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோர் தர்மபுரி அருகே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராஜ்குமார் கடத்தப்பட்டபோது வீரப்பனுடன் இருந்தவர்கள் என கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, நாகராஜ், முத்துசாமி, கல்மண்டி ராமன், மாறன், சத்தியா, அமிர்தலிங்கம், ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ரமேஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.


18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் நீதிபதி கே. மணி இன்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ராஜ்குமார் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள் என அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுவிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக இருந்திருக்கக்கூடிய நடிகர் ராஜ்குமாரிடமுமோ அவருடைய மனைவி பார்வதம்மாவிடமோ எந்த விசாரணையும் நடத்தப்படவில்லையென்பதை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் அணிவகுப்பு நடந்தபோதும் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தவிர, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றும் நீதிபதி சுட்டிக் காட்டியிருக்கிறார்.


பிணைத் தொகை கேட்கும் ஆடியோ கேஸட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதோடு, பிற ஆதாரங்களும் பத்து மாதங்கள் கழித்தே அளிக்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, குற்றம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும் கூறினார்.

இந்தக் கடத்தல் சம்பவத்தின்போது வீரப்பனுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய அரசுத் தூதர்களின் (நக்கீரன் கோபால், பழ.நெடுமாறன், பேராசிரியர் பிரபா.கல்விமணி (கல்யாணி) புதுவை சுகுமாரன்) சாட்சியங்களும் பெறப்படவில்லை என்பதையும் நீதிபதி குறிப்பிட்டார்.


மேலும், இந்த ஒன்பது பேர்தான் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் ஏதும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்ட நீதிபதி, சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்கு அளித்து அவர்களை விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தார்.

பரபரப்பான இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையடுத்து, நீதிமன்றத்தில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.