செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் செப்டம்பர் 29 உலக இருதய தினத்தை முன்னிட்டு சிறப்பு இருதய பரிசோதனை முகாமினை ஆதிபராசக்தி குழும துணைத்தலைவர் லட்சுமி பங்காரு துவக்கி வைத்தார்.
முகாமினை துவக்கி வைத்து பேசிய திருமதி அம்மா லட்சுமி பங்காரு, “தற்போதைய சூழலில் நம்மிடம் சொல்லிக் கொள்ளாமல் வருவதில் முதலிடம் நம் உடல்நல பிரச்சனைகள் தான் எனவும், சாதாரண காய்ச்சல் தலைவலி, இரும்பல், ஜலதோஷம் போன்றவைகளை விட மிக கொடிய நோய் இருதய நோய் எனவும், மனித உறுப்புகளிலேயே தலைசிறந்ததும், மிகவும் நுட்பமானதும், நம் உயிரோட்டத்தினை உறுதி செய்யக் கூடியதும் இருதயம் தான் எனவும், அதனை பேணிக்காப்பதில் நமது பங்கினை அதிகம் செலுத்த வேண்டும் எனவும்” கூறினார்.
உலக இருதய தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பலனடையும் வகையில் ரூ.750/- மதிப்புள்ள இருதய பரிசோதனையை ரூ.99/-க்கு அளித்து சாதாரண மக்களும் தங்கள் இதயத்தை பேணிக்காக்க வழிவகை செய்ய இந்த திட்டத்தினை விரும்பி துவங்கி வைத்ததாக அவர் தெரிவித்தார். இந்த இருதய தின சிறப்பு முகாம் துவக்க விழாவில் வெண்புறாக்களை பறக்கவிட்டும், இதய வடிவிலான பலூன்களை வானத்தில் பறக்கவிட்டும் நமது இருதயத்தை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆதிபராசக்தி மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன கருவிகளுடன் கூடிய இருதயவியல் பிரிவு 24 மணி நேரமும் திறமை வாய்ந்த மருத்துவர்களின் பங்களிப்புடன் செயல்பட்டுவருவதாக தெரிவித்தார். மேலும், இருதயம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், பரிசோதனை செய்யவும் மருத்துவமனையின் சுற்றுவட்டார கிராமப்புறப் பகுதிகளில் வருகின்ற டிசம்பர் மாத இறுதி வரை மொபைல் கிளினிக் செயல்படும் எனவும், கிராமப்புற மக்கள் இதன் மூலம் எளிதில் பயனடையளாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முகக்கவசம் அளிக்கப்பட்டு சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது என ஆதிபராசக்தி மருத்துவமனை குழுமத்தின் இயக்குநர் டாக்டர். த.ரமேஷ் தெரிவித்தார். இந்த முகாம் துவக்க விழாவில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள், புறநோயாளிகள் என ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாமில் ஆதிபராசக்தி மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.பத்ரீ நாராயணன் மற்றும் டாக்டர் ஹரிஹரன், தலைமை நிர்வாக அதிகாரி டி.என்.சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment