நீலகிரியில் நிகழ்ந்த கோர விபத்து ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனசாட்சியையும் உலுக்கி எடுத்துவிட்டது.
குன்னூரில் நஞ்சப்ப சத்திரம் குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று நண்பகல் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மரத்தில் மோதி அதிலிருந்து எரிபொருள் சிந்தியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் 11 பேர் உயிரிழந்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட மூவரில் இருவர் உயிரிழந்தனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுவரப்பட்டன. இது முடிந்தபின் அங்குள்ள மைதானத்தில் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.
அவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்.
இதன்பின் இவர்களின் உடல்கள் 13 ஆம்புலன்ஸ்கள் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன. அங்கிருந்து டெல்லி கொண்டுசெல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் நாளை உடல்கள் அடக்கம் செய்யப்படவுள்ளன. இச்சூழலில் இவ்விபத்தால் பெரிதும் வேதனைக்குள்ளான உதகை மக்கள் வீரர்கள் உயிரிழந்ததற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் நாளை முழு கடையடைப்பை கடைப்பிடிக்கவுள்ளனர். நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவகங்கள் உட்பட அனைத்து வகையான கடைகள் அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment