சனி பகவான் காஸ்யப மகரிஷியின் புதல்வரான சூரிய பகவானின் புத்திரனாவார்.
சூரிய பகவானின் முதல் மனைவியான உஷா தேவிக்கு வைவஸ்வத மனு, எமதர்மராஜன், யமுனை ஆகிய புத்திரர்கள், புத்திரி உள்ளனர்.
சூரிய பகவானின் இரண்டாம் மனைவியான சாயாதேவிக்கு பிறந்தவர் சனி பகவானாவார். சனிபகவானின் மனைவியின் பெயர் ஜேஷ்டாதேவி ஆகும். இவருக்கு மாந்தி என்கிற மகனும் உள்ளார். இவருக்கு சாவர்ணி என்கிற சகோதரியுமுள்ளார்.
சனி பகவான் மகர, கும்ப ராசிகளுக்கு அதிபதி ஆகிறார். 12 ராசிகளையும் சுற்றி வர சராசரியாக முப்பது வருடங்கள் ஆகின்றது.
இவரின் சஞ்சாரத்தினால்தான் "30 வருடங்கள் வாழ்ந்தவனும் இல்லை; 30 வருடங்கள் வீழ்ந்தவரும் இல்லை' என்கிற பழமொழி உண்டாகியது. "சனி கொடுப்பின் எவர் தடுப்பர்?' என்பதும் ஜோதிட வழக்கு. பொதுவாக வாழ்க்கையில் உயர்வையும் மேன்மையையும் புகழையும் கிடைத்தற்கரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் சனி பகவான் மற்றும் ராகு பகவானின் தசையில் அடைவதைப் பார்க்கிறோம்.
இதனால் "சனி வத் ராகு' அதாவது "சனி பகவானைப் போல் ராகு பகவான் செயல்படுவார்' என்கிற வழக்கும் உண்டாகியது.
பஞ்சபூதத் தத்துவங்களில் சனி பகவான் வாயு தத்துவத்திற்கு காரணமாகிறார். சனி பலம் கூடியவர்கள், பெருக்கவும் இளைக்கவும் கூடிய உடலமைப்பைப் பெற்றவர்கள். சாதாரணமான விஷயத்திற்கும் கூட அதிகம் கோபப்படுவார்கள். செய்யும் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். இங்குமங்கும் அலைந்து திரிவார்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். நல்ல தோற்ற அமைப்பைப் பெற்றிருப்பார்கள் என்றும் கூறலாம்!
No comments:
Post a Comment