இந்நிகழ்வில் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால் இதுகுறித்து டி.ஜி.பி. நேரடியாக தலையிட்டு, விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும் என டிடிவி வலியுறுத்தல்.
இராமநாதபுரத்தில் போலீசார் தாக்கியதில் மாணவர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில், உரிய விசாரணை எடுக்க வேண்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், மேலத்தூவல் கிராமத்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இந்நிகழ்வில் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால் இதுகுறித்து டி.ஜி.பி. நேரடியாக தலையிட்டு, விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்கோழியேந்தலை சேர்ந்தவர் லட்சுமணகுமார். இவரது மகன் மணிகண்டன் (21). கல்லூரி மாணவர். நேற்று மாலை பரமக்குடி-கீழத்தூவல் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மணிகண்டன், தனது டூவீலரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
அவரை விரட்டி சென்று பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மணிகண்டனின் டூவீலர் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த இருவரும், மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மணிகண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்துள்ளனர். அவர்கள் வந்து பரிசோதித்த போது, மணிகண்டன் இறந்து போனது தெரியவந்தது. இது குறித்து முதுகுளத்தூர் டிஎஸ்பியிடம், மணிகண்டனின் உறவினர்கள் புகார் அளித்தனர்.
டிஎஸ்பி உத்தரவின்பேரில், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் போலீசார் தாக்கியதால்தான், மணிகண்டன் இறந்துள்ளார் என்று கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாணவர் மணிகண்டன் மரணம் குறித்து #JusticeForManikandan என்ற ஹேஷ்டேக் ட்ரண்ட் செய்யப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment