வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, September 17, 2018

மத சடங்குகளுக்காக மாதவிடாயை தள்ளிப் போடுபவரா நீங்கள்?



ஆலயம்

"மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக நான் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாத்திரையை போட்டுக் கொண்டு மாதவிலக்கை தள்ளிப்போட்டேன்" என்கிறார் 27 வயது கல்யாணி. இவர் வீடுகளில் வேலை செய்து வாழ்க்கை நடத்துபவர்.

கல்யாணிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடவுள் பக்தி, பூசை, புனஸ்காரம் என மிகவும் ஆசாரமானவர் கல்யாணியின் மாமியார்.

கல்யாணியின் வீட்டில், அவரைத் தவிர பிற பெண்கள் அனைவருமே கைம்பெண்கள். எனவே, பண்டிகை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பூஜைக்கான வேலைகளை செய்ய தகுதி படைத்த ஒரே நபராக கருதப்படும் கல்யாணிதான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும்.


இதுபோன்ற சூழலில், கல்யாணிக்கு மாதவிடாய் வந்தால், குடும்பத்தினர், அவரை கடுமையாக கடிந்துக் கொள்வர்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர், மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக மாத்திரையை பயன்படுத்தலாம் என்பது தெரியவந்தபோது கல்யாணிக்கு கிடைக்கும் ஏச்சும் பேச்சும் நின்றுபோனது; ஏனெனில் இயற்கையாக ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாயை அவர் வலுக்கட்டாயமாக நிறுத்த துணிந்துவிட்டார்.
பாரம்பரிய சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் கடைபிடித்தாலும், கல்யாணியின் குடும்பம் மாதவிடாயை தள்ளிப் போடுவதற்கான மாத்திரையை பயன்படுத்துவதற்கு தடை சொல்லவில்லை என்பதைவிட வரப்பிரசாதமாகவே நினைத்தது.






ஆலயம்

ஆனால், பிற நோய்கள் எதுவாயிருந்தாலும், கை வைத்தியத்தையே சிபாரிசு செய்யும் குடும்பங்கள்கூட இந்த மாத்திரைகளை பயன்படுத்த ஊக்குவிப்பது என்பது, வழிபாடு, சடங்குகளின் மீது பொதுமக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது.
"தொடர்ந்து சில மாதங்கள் நிறைய பண்டிகைகள் வரும் காலம். ஆசாரமான எங்கள் குடும்பத்தில் குளிக்காமல் ஒரு பொருளை தொடுவது, சமைப்பது, பூஜை செய்வது போன்ற விஷயங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
அதோடு, நான் வேலை பார்க்கும் வீடுகளிலும், பண்டிகைக் காலங்களில் வேலை அதிகமாக இருந்தாலும், மாதவிடாய் காலத்தில் வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.

அவர்கள் பார்வையில் அவர்களின் எண்ணம் சரிதான். கடவுள் விசயத்தில் எப்படி பொய் சொல்வது? எனவே இந்த விசயத்தில் நாங்கள் பொய் சொல்லமாட்டோம்.
வேலைக்கு போகாவிட்டால் எனது சம்பளமும் குறையும். எல்லாவிதத்திலும் எனக்கு பிரச்சனை கொடுக்கும் இந்த மாதவிடாயை தவிர்ப்பதற்காக நான் ஏன் மாத்திரையை பயன்படுத்தக்கூடாது?" என்று கேள்வி எழுப்புகிறார் கல்யாணி.






ஆலயம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் பண்டிகைக் காலம், நீண்டுக் கொண்டே செல்லும். தீபாவளிக்கு பிறகு ஒரு மாதம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் தொடங்கிவிடும்.
"பண்டிகைக் காலங்களில், அதிலும் குறிப்பாக ஆவணி, புரட்டாசி மாதங்களில் பல பெண்கள் மாதவிடாயை தள்ளிப்போடும் மாத்திரையை வாங்கிச் செல்வார்கள். நாளொன்றுக்கு 10-15 அட்டை மாத்திரைகள்", என்கிறார் மருந்துக் கடை வைத்திருக்கும் ராஜூ.
அவரது கருத்துப்படி, நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும் இந்த மாத்திரை அமோகமாக விற்பனையாகிறது.
'மாசு', 'தீட்டு' 'சுத்தமின்மை' போன்ற பல காரணங்களால் பெண்கள் மாதவிடாய் மாத்திரைகளை அதிகளவில் வாங்குகின்றனர்.
இன்னமும் மாதவிடாய் பற்றிய விஷயங்களை வெளிப்படையாக பேசத் தயங்கும் இந்தியாவில் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருப்பது கவலை ஏற்படுத்துகிறது.






மூளைபடத்தின் காப்புரிமைBSIP/GETTY IMAGES

மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தியாவின் பல மாநிலங்களில் இன்றும்கூட பெண்கள் வீட்டின் வெளிப்புறத்தில் ஒதுக்குப்புறமாக தங்கவைக்கப்படுவதும், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை தனியாக ஒதுக்கி வைத்து யாரும் அதைத் தொடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நடைமுறைகளும் தொடர்கின்றன.


வீட்டிற்குள் இருக்க நேர்ந்தாலும், அவர்களை தீண்டத்தகாதவர்களாகவே நடத்துவதும், அவர்களுக்கு தட்டு, படுக்கை, போர்வை, தலையணை எல்லாம் தனியாக கொடுத்து, ஒதுக்கி வைத்துவிட்டு, மாதவிடாய் முடிந்ததும் வீட்டை சுத்தம் செய்து அவர்கள் பயன்படுத்திய பொருட்களை புனிதப்படுத்துவதையும் மறுக்க முடியாது.
மாதவிடாய் சமயத்தில் பண்டிகைக் காலத்தில் பூசைகளில் கலந்துக் கொள்வதற்கு பெண்களுக்கு தடை விதிக்கப்படுகிறது, அந்த சமயத்தில் அவர்கள் கோயில்களுக்குள் செல்ல முடியாது.






பெண்கள்படத்தின் காப்புரிமைPRAKASH MATHEMA/AFP/GETTY IMAGES

இந்த மாத்திரைகளை உட்கொண்டால் பக்க விளைவுகள் உண்டா?


"இந்த மாத்திரைகளை வாங்குவதற்காக வரும் பெண்கள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு கொண்டு வருவதில்லை. பொதுவாக இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு மருத்துவரை ஆலோசிப்பதும் இல்லை. மூன்று மாத்திரைகள் சாப்பிட்டாலே மாதவிடாய் தள்ளிப்போகும் என்றாலும், ரிஸ்க் எடுக்க விரும்பாமல் ஏழு அல்லது எட்டு மாத்திரைகளை பெண்கள் பயன்படுத்துகிறார்கள்" என்கிறார் ராஜூ.
இந்த மாத்திரைகளை உட்கொண்டால் பக்க விளைவுகள் உண்டா? என்ற கேள்விக்கு, இந்த மாத்திரைகளை உட்கொள்வதற்கு எந்தவொரு மருத்துவரும் பரிந்துரைக்க மாட்டார்கள் என்கிறார், சஹயாத்ரி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் கெளரி பிம்ப்ரால்கர்.
"மாதவிடாய் சுழற்சியானது பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் என்ற இரண்டு ஹார்மோன்களை சார்ந்தது.
மாதவிடாயை தாமதப்படுத்துவதற்கு இந்த ஹார்மோன் மாத்திரைகளை எடுக்க வேண்டும். அதாவது, இந்த மாத்திரைகள் உங்கள் ஹார்மோன் சுழற்சியை மாற்றுகின்றது என்பதுதானே பொருள்? "
"இந்த ஹார்மோன் மருந்தை தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை செயலிழப்பு, பக்கவாதம், வலிப்பு நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
இதுபோன்ற பல பெண்களை நான் பார்க்கிறேன். 10-15 நாட்களுக்கு மாதவிடாயை தாமதப்படுத்துவதற்காக பெண்கள் அதிக அளவிலான மருந்தை உட்கொள்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது" என்கிறார் மருத்துவர் கெளரி.







மாத்திரைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

யார் இந்த மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது?

மாதவிடாயை தள்ளிப்போடுவதற்கு மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்கள் மருத்துவரை ஆலோசனை செய்வதேயில்லை. "மருந்துக்கடைகளில் எளிதாக இந்த மாத்திரைகள் கிடைப்பதால், தேவையில்லை என்றாலும் அற்ப காரணங்களுக்காகவும், இதன் கடுமையான விளைவுகளை தெரிந்துக் கொள்ளாமல் பெண்கள் பயன்படுத்துகிறார்கள்”. என்கிறார் மருத்துவர் கெளரி.
இந்த மருந்தை எடுத்துக் கொள்வதற்கு முன், அந்த பெண்ணின் மருத்துவ பின்னணியையும் கணக்கில் கொள்ள வேண்டும். தலைவலி, ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்களும், பருமனான பெண்களும் கண்டிப்பாக இந்த மருந்தை பயன்படுத்தக்கூடாது.

விளையாட்டு வீராங்கனைகளின் நிலை என்ன?

விளையாட்டுப் போட்டிகளின்போது மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக வீராங்கனைகள் இந்த மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள். இது அவர்களின் உடல்நலனை பாதிக்காதா?







பெண்கள்

"விளையாட்டு வீராங்கனைகளின் நிலையே வேறு. அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டும், சத்தான உணவை உட்கொண்டும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது. அதுமட்டுமல்ல, அவர்கள் தொடர்ந்து இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதில்லை.
ஆனால் மத நம்பிக்கைகளுக்காக இந்த மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களின் நிலையும், உடல் ஆரோக்கியமும் வேறு," என்கிறார் கெளரி.

'மாதவிடாயின் போதும், நான் விநாயகர் பூசைகளை செய்கிறேன்'

மாதவிடாய் காலத்தில் வீட்டிற்கு வெளியே தள்ளப்படும் பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கிராமங்களில் அதிகம் என்பதோடு, மத நம்பிக்கைகளுக்காக மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக மாத்திரைகளை சாப்பிடுவர்களின் எண்ணிக்கையும் கிராமங்களில் அதிகமாகவே இருக்கிறது.






அம்மன்

"மாதவிடாய் காலத்தில் பூஜை செய்யாதே என்றோ அல்லது மத வழிபாடுகளை செய்யக்கூடாது என்றோ சொல்லவில்லை. எனவே மூட நம்பிக்கையின் அடிப்படையில் பெண்கள் தங்கள் உடலை வருத்திக் கொண்டு, ஆபத்துக்கு உட்படுத்திக் கொள்ளக்கூடாது" என்கிறார் மருத்துவர் கெளரி.


ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு பிரபலமான திருப்தி தேசாய் என்பவரும் மருத்துவர் கெளரியின் கருத்தையே வழிமொழிகிறார்.
"மாதவிடாய் என்பது தீட்டோ, தீண்டத்தகாததோ அல்ல. இதை ஓர் இயல்பான நிகழ்வான ஏற்றுக் கொள்ளவேண்டும். மத நம்பிக்கைகளுக்காகவும், சடங்குகளுக்காகவும் அதை தள்ளிப்போடுவது முற்றிலும் தவறானது.
எனக்கு மத நம்பிக்கை இருக்கிறது, மாதவிடாய் ஏற்படும்போதும் நான் கோயில்களுக்கு செல்கிறேன், மாதவிடாயை காரணம்காட்டி எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளமுடியாது என்று நான் சொல்லமாட்டேன். மாதவிடாய் என்றாலே தீட்டு, மாசு என்ற எண்ணத்தை மாற்றவேண்டும்" என்கிறார் திருப்தி தேசாய்.






ஆலயம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தர்மசாத்திரங்களில் எங்குமே மாதவிடாயை தீட்டு என்று குறிப்பிடவேயில்லை என்று கூறுகிறார் பஞ்சாங்கம் எழுதும் டி.கே.சோமன்.
"பழங்காலத்தில் மாதவிடாயின்போது பெண்கள் வீட்டின் மூலையில் தனியாக அமர வைக்கப்பட்டதற்கு காரணம் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகவும், ஒட்டு மொத்தமாக சுகாதாரத்தை மேம்படுத்தவும்தான். இன்றைய சூழலில் அதற்கான தேவையில்லை.
இன்று பெண்கள் தனியாகவும் வசிக்கும் நிலையில், தெய்வத்திற்கு உணவு படைக்க வேண்டும் என்றால் அதை யார் சமைப்பார்கள்?
அந்த பெண்ணே செய்யலாம்… கடவுளுக்கு படைக்கும்போது அந்த உணவில் துளசி அல்லது தர்பைப்புல்லை போடுவோம். எனவே அதில் பாதகமில்லை. அதேபோல் மாதவிடாய் காலத்தில் பெண்கள் வழிபாடுகள் செய்யலாம்" என்கிறார் சோமன்.

"கடவுள் என்பவர் மனிதர்கள் மீது கோபம் கொள்வதில்லை என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். எனவே தவறான புரிதலால் பெண்கள் மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக மாத்திரைகளை பயன்படுத்தி உடலை கெடுத்துக் கொள்ளக்கூடாது" என்கிறார் சோமன்.






ஆலயம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்நிலை பொறுப்பு வகிக்கும் மேகா என்ற பெண், தான் பல முறை மத ரீதியிலான காரணங்களுக்காக மாத்திரைகளை பயன்படுத்தியிருப்பதாகவும், ஆனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்பட்டதில்லை என்றும் கூறுகிறார்.
"மாதவிடாய் காலத்தில் பெண்கள் பூஜை செய்யக்கூடாது என்ற கருத்து எனக்கும் ஏற்புடையதல்ல. ஆனால், என் மாமியாருக்கு அந்த நம்பிக்கை இருப்பதால், அவரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தே நான் மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்னர் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் அந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன்" என்கிறார் மேகா.
மாதவிடாயை தள்ளிப்போடும் மாத்திரைகள் பக்கவிளைவை ஏற்படுத்துமா இல்லையா என்பது விவாதத்தின் பிரதான கருப்பொருள் அல்ல. ஆனால், தங்களது ஆரோக்கியத்தை பணயம் வைத்து பெண்கள் மத ரீதியிலான மூட நம்பிக்கைகளை பின்பற்ற வேண்டுமா என்பதே நம் முன் இருக்கும் பிரம்மாண்டமான சவால்!

Sunday, September 16, 2018

காதல் மனைவியின் கண் முன்னே தலித் கணவர் வெட்டிக் கொலை


தெலங்கானா மாநிலத்தில் தலித் வகுப்பை சேர்ந்த பெருமாள பிரனாய், சாதியை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது மனைவி அம்ருதாவின் கண்முன்னே வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரனாய் மற்றும் அம்ருதாபடத்தின் காப்புரிமைAMRUTHA.PRANAY.3 / FACEBOOK
தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாளகுடா பகுதியை சேர்ந்த பெருமாள பிரனாய், கர்ப்பிணியான தனது மனைவி அம்ருதாவை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்று திரும்பிய நேரத்தில் வெள்ளிக்கிழமை மதியம் கழுத்தில் வெட்டப்பட்டார். சம்பவ இடத்திலே அவரது உயிர் பிரிந்துள்ளது.
மிர்யாளகுடாவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஆதிக்க சாதியை சேர்ந்தவருமான மாருதி ராவின் மகளான அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்தான் 24 வயதான பெருமாள பிரனாய்.
10ம் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோதே, அறிமுகமாகியிருந்த இவர்கள் இருவரும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் காதலித்து, திருமணம் செய்து கொள்ள குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

பிரனாய் மற்றும் அம்ருதாபடத்தின் காப்புரிமைAMRUTHA.PRANAY.3 / FACEBOOK
ஆனால், பெருமாள பிரனாய் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதல் திருணமத்திற்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்ப்பை மீறி ஹைதராபாத் சென்ற பெருமாள பிரனாயும், அம்ருதாவும், அங்குள்ள ஆரிய சமாஜில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி திருமணம் செய்துள்ளனர்.
இதனால் கோபம் கொண்ட மாருதி ராவ், பெருமாள பிரனாயை மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை கர்ப்பிணியான தனது மனைவியை பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு பிரனாயும், அவரது தாயும் அழைத்து சென்றுள்ளனர்.
பிரனாய் மற்றும் அம்ருதாபடத்தின் காப்புரிமைAMRUTHA PRANAY / FB
பரிசோதனை முடிந்து வெளியே வந்தபோது, மருத்துவமனையின் வாயிலுக்கருகில் பிரனாய் ராவை கழுத்தில் இருமுறை வெட்டி கொன்றுள்ளனர்.
இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தாக்கியவர் அந்த ஆயுதத்தை அங்கேயே விட்டு சென்றுள்ளார்.
இதற்கு முன்னரும் சில நேரங்களில் பிரனாயை தாக்க முயற்சிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
நல்கொண்டா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரெங்கநாத் தெரிவிக்கையில், "இதுவொரு ஆணவக்கொலை. குற்றவாளிகளை விரைவில் பிடிக்க முயற்சித்து வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
பிரனாய் மற்றும் அம்ருதாவை ஆயுதத்தோடு பின்தொடரும் தாக்குதலாளி.படத்தின் காப்புரிமைUGC
Image captionபிரனாய் மற்றும் அம்ருதாவை ஆயுதத்தோடு பின்தொடரும் தாக்குதலாளி.

அம்ருதாவின் தந்தை மாருதி ராவும், அவரது தம்பி ஷிவானும் இணைந்து திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி இந்த கொலையை நடத்தியிருக்கலாம் என்று காவல் துறை சந்தேகப்படுகிறது.
"மாருதி ராவ் கோடீஸ்வரர். அவர் தொந்தரவு அளிக்கலாம். எனவே, இருவக்கும் திருமணமானவுடன், வேறிடத்திற்கு சென்றுவிட மகனையும், மருமகளையும் வற்புறுத்தினேன். தனது தந்தையின் கோபத்தை தானே தணித்து விடுவேன் என்றும் அம்ருதா கூறிவிட்டார்" என்று பிரனாயின் தந்தை பாலசாமி பிபிசியிடம் தெரிவித்தார்,
"திருமணத்திற்கு பிறகு அவர்கள் எனது மகனை கொல்ல திட்டமிட்டிருந்தனர். பிரானயும் எச்சரிக்கையுடன்தான் இருந்தார். ஆனாலும், இந்த கொடிய சம்பவம் நடத்துவிட்டது" என்று அவர் கூறினார்.
அம்ருதா மற்றும் அவரது தந்தை மாருதி ராவ்படத்தின் காப்புரிமைAMRUTHA.PRANAY.3 / FACEBOOK
Image captionஅம்ருதா மற்றும் அவரது தந்தை மாருதி ராவ்
தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறை ஐ.ஜியிடம் இந்த ஜோடி முன்னதாக கேட்டுள்ளது.

இந்த விடயத்தில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவை அழைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
காவல்துறை கண்காணிப்பாளரின் அறிவுரைக்கு கீழ்படிவதாக மாருதி ராவ் வாக்குறுதியும் அளித்துள்ளார்.
பின்னர், அம்ருதாவின் பெற்றோர் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். இவ்வாறு தாங்களின் கோபம் சற்று தணிவடைந்து விட்டதுபோல் காட்டி இந்த கொலையை செய்துள்ளதாக கருதப்படுகிறது.
மாருதி ராவின் தம்பி ஷிவான்படத்தின் காப்புரிமைNALGONDA POLICE / FB
Image captionமாருதி ராவின் தம்பி ஷிவான்
இது தொடர்பான வழக்கில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் முதல் குற்றவாளியாகவும், அவரது தம்பி ஷிவான் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே மாருதி ராவ், ஷிவான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறை தெரிவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலித் அமைப்புகள் கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

Friday, September 14, 2018

உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பிரிட்டன் குழந்தை


இந்தப் பெண் குழந்தைக்கு இதயம் இருக்கிறது. 

ஆனால், உடலுக்கு வெளியே. இந்த அசாதாரணமானக் குழந்தை வேனலோப் உயிர் பிழைக்க 10% வாய்ப்பு மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.


Monday, September 10, 2018

மரணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன?



மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.




மரணம்படத்தின் காப்புரிமைSPL

இதைப் பற்றி யாரும் துல்லியமாக சொல்லிவிட முடியாது. விஞ்ஞானிகளால் இது தொடர்பான சில தகவல்களை சொல்ல முடியும் என்றாலும், இந்த கேள்விக்கான பதில் பிரம்ம ரகசியமாகவே உள்ளது.
இருந்தாலும், விஞ்ஞானிகளும் இதுபோன்ற சிக்கலான புதிர் நிறைந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடும் முயற்சிகளில் தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.

அண்மையில் மரணம் தொடர்பாக சில விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகள் ஆச்சரியமான முடிவுகளை தந்துள்ளது. இந்த ஆய்வுகளில் நரம்பியல் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெர்லின் சாரிட் பல்கலைக்கழகம் மற்றும் ஓஹியோவில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஜென்ஸ் ட்ரேயரின் தலைமையின் கீழ் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்காக, சில நோயாளிகளின் குடும்பத்தினரின் முன்னனுமதியை பெற்று, நோயாளிகளின் நரம்பு மண்டலத்தை விஞ்ஞானிகள் நெருக்கமாக கண்காணித்தார்கள்.




மருத்துவமனைபடத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY

சாலை விபத்துகளில் படுமோசமாக காயமடைந்தவர்கள், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பால் (கார்டியாக் அரெஸ்ட்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விஞ்ஞானிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தினார்கள்.
மரணிக்கும் நேரத்தில் மனிதர்களின் மூளையும், விலங்கின் மூளையும் ஒன்றுபோல் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மேலும், மூளையை 'ஏறத்தாழ'மறுசீரமைப்பு செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மரணத்தின் இறுதி கட்டத்தில் மூளையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதோடு, மரணத்தின் இறுதித் தருணத்தில் இருக்கும் மனிதனை எப்படி காப்பாற்றலாம் என்பதும் இந்த ஆய்வின் முக்கியமான நோக்கங்களாக இருந்தது.




மூளைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த ஆய்வை விஞ்ஞானிகள் மேற்கொள்வதற்கு முன்னர், 'மூளை மரணம்' பற்றி நாம் அறிந்திருக்கும் செய்திகள் பெரும்பாலும் விலங்குகளின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலிருந்து தெரிந்துக் கொண்டவை என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

மரணம் பற்றி நாம் ஏற்கனவே அறிந்தவை:

  • உடலின் ரத்த ஓட்டம் நின்றுபோய், மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வது குறையும்.
  • இந்த நிலையில், பெருமூளைச்சிரையில் ரத்த ஓட்டம் குறைவதால் (cerebrovascular ischemia), மூளையில் ரசாயன மாறுபாடுகள் ஏற்படுகின்றன. மேலும் மூளையின் 'மின் செயல்பாடு' (Electrical activity ) முற்றிலுமாக நின்றுபோய்விடும்.
  • மூளை அமைதியடையும் நடைமுறைக்கு காரணம், ஆற்றல் தேவைக்கான பசியுடன் இருக்கும் நரம்புகள், தங்களுக்கு தேவையான ஆற்றலைப் பெற்றாலும், மரணம் நெருங்குவதால் அந்த ஆற்றல் பயன்படுவதில்லை என்று நம்பப்படுகிறது.
  • அனைத்து முக்கிய அயனிகளும், மூளை செல்களிடம் இருந்து பிரிந்துவிடுகின்றன. இதனால் அடினோசின் டிரைஃபாஸ்பேட் கிடைப்பது பலவீனமாகிறது. இது ஒரு சிக்கலான கரிம வேதியியல் ஆகும். உடல் முழுவதிலும் ஆற்றலை சேமித்து வைப்பதும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதும் இதன் வேலை.
  • இதற்கு பிறகு திசுக்களை மீட்டெடுப்பது சாத்தியமற்றதாகிவிடும்.





ஆராய்ச்சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி

ஆனால், ஜென்ஸ் ட்ரேயர் தலைமையிலான விஞ்ஞானிகளின் குழு மனிதர்களைப் பொறுத்தவரை இந்த செயல்முறையை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள விரும்பியது. அதனால் சில நோயாளிகளின் மூளைகளின் நரம்பியல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.
மின்முனையக் கீற்றுகளை (Electrode strips) பயன்படுத்தி இந்த நோயாளிகளை மயக்க நிலையில் இருந்து மீட்டெடுக்க முயற்சி செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.
ஒன்பது நோயாளிகளில் எட்டு பேருடைய மூளையின் அணுக்கள், மரணத்தை தவிர்க்க முயற்சிப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மூளையின் அணுக்களும், நரம்பணுக்களும் இதயத் துடிப்பு நின்ற பிறகும்கூட வேலை செய்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
மனிதர்களின் நரம்பு மண்டலத்தின் பிரதானமானது மனித மூளை. அதுமட்டுமல்ல, மனித உறுப்புகளில் சிக்கலானதும் மூளை என்பதும் நமக்கு தெரிந்ததே. உடலின் இயல்பான செயற்பாடுகளான மூச்சுவிடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொள்ளும்.
அதேபோல், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், திட்டமிடுதல் போன்ற செயற்பாடுகளையும் மனித மூளைதான் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.


உணர்வு உறுப்புகளுக்கும் செயல்படும் உறுப்புகளுக்கும் இடையே மின்வேதியல் மாற்றங்கள் மூலம் தூண்டல்களைக் கடத்தும் பணியை செய்வது நரம்பணுக்கள் (நியூரான்கள்). இந்த மின்வேதியல் மாற்றங்கள் நரம்பணுக்களின் உள்ளும் புறமும் நடைபெறும் சோடியம் மற்றும் பொட்டாசியம் அயனிகளின் இடம்பெயர்வால் நிகழ்கிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மின்வேதியல் சமநிலையை பராமரிப்பது ஒரு தொடர் முயற்சியாகும்.




दिमाग, दिलபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உடலின் அணுக்கள் மின்வேதியல் சமநிலையை பராமரிக்க ரத்த ஓட்டத்தைப் பயன்படுத்துகின்றன, மேலும் இதிலிருந்தே ஆக்ஸிஜன் மற்றும் ரசாயன ஆற்றலையும் எடுத்துக்கொள்கின்றன.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உடல் இறக்கும் போது, மூளையின் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும். அந்த சமயத்தில் செயலிழந்த நரம்புகள் தனது ஆற்றலை தக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றன.
இது மெதுவாக பரவுவதற்கு பதில் மூளையில் ஒரே சமயத்தில் நடைபெறுவதால், இதை 'தவிர்க்க முடியாத மூளை அழுத்தம்' என்று கூறுகின்றனர். இந்த நிலை ஏற்படுத்தும் விளைவை எளிதாக புரிந்துக் கொள்வதற்காக, சுனாமியுடன் ஒப்பிட்டு, 'பெருமூளை சுனாமி' என்றும் அழைக்கின்றனர்.


மின்வேதியல் சமநிலை மாறுபடுவதால் மூளையில் உள்ள அணுக்கள் அழிக்கப்படும்போது, உடலில் இருந்து அதிக அளவிலான வெப்ப ஆற்றல் வெளியாகிறது. இதன்பிறகு மனித உடல் மரணிக்கிறது.




Blood testபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

'மரணமற்ற பெருவாழ்வு'

ஆனால், இந்த ஆய்வின்படி, இன்று மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்ற நிதர்சனமான உண்மை, எதிர்காலத்தில் மாறக்கூடும் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அப்போது 'மரணமற்ற பெருவாழ்வு' வாழும் சூழ்நிலையும் உருவாகலாம்.


ஜென்ஸ் ட்ரேயர் இவ்வாறு கூறுகிறார்: "சோடியம் அயனிகளின் ஊடுருவலால், நரம்பு மண்டலத்தின் பிளாஸ்மா சவ்வின் உள்ளேயும் வெளியேயும் இடையே ஏற்படும் ஆற்றல் வேறுபாட்டால் ஏற்படும் இழப்பு, அணுக்களின் உருமாற்றத்தை தொடங்குகிறது. ஆனால் இது மரணம் அல்ல. ஏனெனில் மீண்டும் உடலில் மின்முனைவை அளித்து, அதை மீட்டெடுக்க முடியும். இதனால் மரணத்தில் இருந்து மனிதனை மீட்டெடுத்து, இறப்பை தவிர்க்க முடியும்."
எனினும், இறப்பை தவிர்ப்பதற்கான நடைமுறைகளை கண்டறிய இன்னும் நிறைய ஆராய்ச்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கான ஆராய்ச்சியும், மரணத்தை போன்றே சிக்கலானது என்று கூறுகிறார் ஜென்ஸ் ட்ரேயர். அதாவது, மரணம் தொடர்புடைய கேள்விகளுக்கு பதில் கிடைப்பதும் எளிதானதில்லை.
ஆனால், முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்ற பழமொழியை காலம் நிரூபித்து வருவதைப் போன்றே, மரணம் என்ற ஒன்றும் மனிதனுக்கு இல்லை என்ற புதுமொழியை உருவாக்க ஆராய்ச்சிகள் தொடரும். இந்த ஆராய்ச்சி மனிதனின் மரணத்தை மரணிக்கச் செய்யும் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது.

Popular Posts